Monday, 22 June 2020

கடுவெளிச் சித்தர்


பல்லவி

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சரணங்கள்

சாபம் கொடுத்திட லாமோ ? - விதி

தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை

கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்

சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த

நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2

நீர்மேற் குமிழியிக் காயம் - இது

நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்

சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்

திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5

நல்ல வழிதனை நாடு- எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட

பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7

வேத விதிப்படி நில்லு - நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்

பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்

இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை 

அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

மெய்குரு சொற்கட வாதே - நன்மை

மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல

புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11

கூடவருவ தொன்றில்லை - புழுக்

கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்

தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த

ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த

மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை

ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்

கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்

கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல

பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்

போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்

மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்

சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்

ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்

பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்

சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர

மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்

ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்

கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி

சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்

தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்

வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை

எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த

வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

இந்த வுலகமு முள்ளு - சற்றும்

இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்

சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்

மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

வைதோரைக் கூடவை யாதே: - இந்த

வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை

வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்

தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல

சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்

பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்

வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்

புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்

தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி

காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி

அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த

பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்

தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்

சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்

ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

எவ்வகை யாகநன் னீதி - அவை

எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்

ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

கள்ள வேடம் புனையாதே - பல

கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு

கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

எங்கும் சுயபிர காசன் - அன்பர்

இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்

துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...