Tuesday, 31 July 2018

சித்தர்கள் அருளிய சிவ(வசி)யோகம்

சித்தர்கள் அருளிய சிவ(வசி)யோகம்
“உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே”
உடம்பை வைத்தே உயிரைநீடிக்க இயலும் ஆதலின் சித்தர்கள் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். உடம்பை வளர்த்தல் என்பது உடல் சதைப்பிடிக்க நன்றாக உண்டு வளர்த்தல் அல்ல, உடலில் நரை திரை மூப்பு பிணி இவை இல்லாது உடலை வளர்த்தலேயாம். உடலில் நரை திரை மூப்பு பிணி உண்டாக காரணம் உடலில் உள்ள வாத பித்த கபம் சமநிலை மாறுதலே.
வாதம்:-  நம் உடலில் இயக்கத்தையும், தசை மூட்டு, எழும்புகளின் இயக்கத்தையும், சுவாசத்தையும், உடல் கழிவுகளை வெளியேற்றுதலும்
பித்தம்:- உடலின் வெப்பநிலையையும் ரத்த ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லா சுரப்பியின் இயக்கத்திற்கும்.
கபம்:- நீர்த்துவத்தையும் நெயப்புத்தன்மையும் தந்து உடல் பணிகளை செய்கின்றன
இவை “மிகையினும் குறையினும் குற்றமாம்”
இதற்க்கு காரணம் முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காததே, முறைப்படுத்தப்பட்ட உணவுப்பழக்கத்தால் நிச்சயம் இவற்றை வெல்லலாம்
“காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலங்
கணக்காய்உண்டு வரின் கொலூன்றிய
கிழவனும் கோலைவீசிமிடுக்காய் நடப்பானே”
காலையில்: எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு துண்டு இஞ்சியை அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு மேலுள்ள தெளிவு நீரை மட்டும் எடுத்து அதனுடன் தேன்சேர்த்து அருந்தவேண்டும். இதனால் பித்தம் சமநிலைப்படும்.
மதியம்: உணவுக்கு முன் சுக்கு பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்தி 30 நிமிடம் கழித்து உணவு உண்ணவேண்டும். இதனால் வாயு சமநிலைப்படும்.
இரவு: உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் அளவாக பொடிசெய்த கடுக்காயை வெந்நீரில் கலந்து குடிக்கவும். இதனால் கபம் சமநிலைப்படும்.
இவ்வாறு அனுதினமும் கடைபிடித்துவரின் உடலுக்கு கேடு வராது.
உணவுமுறை
காலையில்: சமைக்காத உணவே சிறந்தது அவ்வாறு காலையில் பழங்கள், தானியங்கள், பயறு வகைகள் ஊறவைத்து முளைக்கட்டியது, காய்கறிகள், கிழங்குவகைகள். இவைகளே காலையில் உண்ணவேண்டும்.
மதியம்: அரிசி உணவு குறைவாகவும் அதனுடன் காய்கறி, கீரைகள் அதிகமாக எடுத்துக்கொள்ளவும்
இரவு: உணவு மிதமான உணவாக இருக்கவேண்டும்.
“அரைவயிறு அண்ணம் கால்வயிறு நீர் கால்வயிறு காற்று” நிரம்பியவாறு உண்ணப் பழக வேண்டும்
இதுபோன்ற உணவுமுறைகளைக் கடைபிடித்து உடலைப் பாதுகாத்தல் அவசியம். உடல் உயிரைக்காக்க சித்தர்கள் கூறிய சூட்சமமே
“வாதம், வைத்தியம், யோகம், ஞானம்”
வாதம் என்பது காற்று உடலில் இயங்கும் காற்றை வைத்தே உடலின் அனைத்து செயலும் தீர்மானிக்கப்படுகிறது ஆக காற்றைப்பிடி
வைத்தியம் என்பது நோயினை நீக்கும் முறை உடலின் நோயினை நீக்கும் வழி தெரிந்திருக்க வேண்டும்
யோகம் என்பது ஒருநிலைப்படுதல் எப்போதும் மனம் சஞ்சலப்படாது ஒருநிலையில் வைத்திருக்கும் சூட்சம் அறிந்தோன் யோகி
ஞானம் என்பது நுண்ணுணர்வால் அடையும் அனுபவத் தெளிவு ஞானம்
 நாம் முதலில் இந்த சிவயோகத்திற்க்கு தயாராகுவது எப்படி?
அலைபாயும் மனதை அடக்குவது கடினம் ஆனால் ஒடுக்குவது எளிது. நம்மில் பலர் மனதை அடக்கி யோகம் பயில்கிறேன் என்று சொல்லி திரிகின்றனர் ஆனால் அது அவர்களால் இயலுவதில்லை காராணம் மனதை அடக்கினால் அது என்றேனும் ஒருவழியில் தன்னை வெளிப்படுத்தும். ஒடுக்குதல் என்பது மிக எளிதாக நடைபெறக்கூடியது இதைத்தான் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்
முன்னோர் கூறிய வழியில் நடப்பது வழி படுதல் (நடப்பது) ஆகும்  இந்த வழிபடுதல் முறை பிற்காலத்தில் வழிபாட்டுத் தலங்களாயிற்று,
ஒரு உண்மையை உணர வேண்டும்
கற்ப கிரகத்தில் இருக்கும் உருவம் உம்மை போன்ற (தெய்வ) உருவம் அதற்கு செய்கின்ற அனைத்து அபிசேகமும் (நீர், பால், தயிர், நெய், தேன், பழம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்நீர், சந்தனம், மஞ்சள், குங்குமம்/விபூதி, அழகு ஆபரனங்கள் அணிவித்தல்) என அபிசேகித்த சிலைக்கு ஆடை ஆபரணம் அணிவித்துக் காட்டும் தீப ஆராதனை உன்னுள் இருப்பது ஆன்மா (ஜோதியே) என சிலையின் (தெய்வ) முகத்திற்கு நேரே காட்டி இவ்வுடலில் ஆன்மா இருப்பது புருவ மத்தியில், இந்த ஆன்மாவே இவ்வுடல் எடுக்கக் காரணமாயிற்று என்று உச்சி முதல் பாதம் வரை காட்டி மீண்டும் மேலேற்றி இதை அனைவரும் உணர்க என சூட்சமத்தை காட்டிய பின் நம்மிடம் ஆரத்தி தட்டு வரும் போது ஆம் இவ்வழியே என் ஆன்மாவை உணர்கிறேன் என்று தீபத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றி, பிறகு கொடுக்கும் திருநீரை(குங்குமம்) நெற்றியில் இட்டு என் ஆன்மாவை இங்கு உணர்கிறேன் என உணரச்செய்வது வழிபடுமுறை,
ஆனால் நாம் கோவிலில் இறைவனை வணங்குகின்றபோதோ நம்முள் நடப்பது
“மனம் ஒன்றை நினைக்க காதொன்றை கேட்க்க
கண்ணொன்றை பார்க்க மூக்கொன்றை நுகர”
இறைவனை எப்படி காண இயலும்.
சிவ சிவ என்பதே வசி வசி மூச்சிலே இயங்கும் பிராணனை முறையாக இயக்கும் சூட்சமமே அனைத்துப் பழங்கால சிவ ஆலயங்களில் நம் முன்னோர்கள் உணர்த்தியதும்.
“மூக்கில் வருவதும் போவதுவும்  இயல்பாய் நடப்பது சுவாசம்
இயல்பாய் நடப்பதை கவனித்தல் வாசி ஆகும்”
இவ்யோகம் பயில விரும்பும் அன்பர்கள் தகுந்த ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தான் தனித்திருந்து வெண்துகில், கம்பளி, தர்ப்பை விரிப்பில் பதுமம், வீரம், கோமுகம், வஜ்ரம் போன்ற ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து தலை, முதுகு, கழுத்து நேராய் நிமிர்த்தி கண்ணை மூடி
உங்கள் குலதெய்வத்தை வணங்கி,
பின் இஷ்டதெய்வத்தை வணங்கி,
தாயையும் தந்தையையும் வணங்கி
ஆதிகுருவே வருக  சிவகுருவே வருக
கந்த குருவே வருக சர்வ சித்தர்களும்
யோகிகளும் ஞானிகளும் குருவாய் வருக
இச்சிவயோகத்தினையருளி வழிநடத்த
ஞான குருவே வருக வருகவே!!!!!
என வணங்கி இரு கண்விழிகளை திறந்து மூக்கு நுனியை பார்க்கவேண்டும். பார்வை மூக்கு நுனியிலும், உங்கள் மனம் மூக்கில் உள்ளும் வெளியும் வந்து செல்லும் சுவாசத்திலும் இருக்க வேண்டும். காது மூக்கிலே இயங்கும் சுவாசத்தில் உண்டாகும் சப்தத்தை கவனிக்க வேண்டும். இவ்வாறு கண், காது, மூக்கு, வாய், மெய் என அனைத்தும் மூச்சிலே ஒடுங்கி இருப்பதால் எண்ணமற்ற, உடல் இயக்கமற்ற ஏகாந்த இறைநிலையை உன்னிலே காணலாம்
“ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டெரித்து
தூங்காமல் தூங்கி சுகம்பெருவது எக்காலம்”
“ஓடாதே ஒடுங்காதே ஒருமந்திரமும் பண்ணாதே சும்மா இரு”
உன் சித்தம் தெளிய வேண்டுமாயின் இவ்யோகத்தை பயின்று மாயப் பிறப்பறுக்க அவனருளால் மட்டுமே இயலும் ஆதலின் சித்தர்களை குருவாய் கொண்டு அவர்கள் வழங்கிய யோகத்தின் மூலம் சிவத்தை அடைய முயற்சிப்போர் இவ்வுலக நலன்களைப்பெற்று சிவநிலை அடைய ஆதிகுருவின் அடிபற்றி வேண்டுகிறேன்.

2 comments:

  1. ஐயா
    "ஓடாதே ஒடுங்காதே ஒருமந்திரமும் பண்ணாதே சும்மா இரு"

    இந்த பாடல் யார் சொல்லியது

    ReplyDelete
  2. ஐயா
    "ஓடாதே ஒடுங்காதே ஒருமந்திரமும் பண்ணாதே சும்மா இரு"

    இந்த பாடல் யார் சொல்லியது

    ReplyDelete

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...